செய்திகள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். 9 பேருக்குமான தண்டனை விவரம் நண்பகல் 12 மணியளவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தீர்ப்பை ஒட்டி கைதான 9 பேரும் இன்று (மே 13) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று (மே.13) காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு குறித்துஅரசு தரப்பு சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழகமே எதிர்பார்த்திருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் கூட்டு பாலியல் வன்முறை குற்றச்சாட்டு மற்றும் மீண்டும், மீண்டும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஒருவர்கூட பிறழ்சாட்சியாக மாறவில்லை. குற்றவாளிகள் 9 பேருக்குமான தண்டனை விவரம் நண்பகல் 12 மணியளவில் வழங்கப்படும்.